
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார். இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார்.
இதற்கிடையே அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்க வந்த சசிகலாவை சந்தித்து பேசினர்.
செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரிலிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.விலிருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரின் படம் மறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



