
தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டு, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்தச் சதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரைப் பிடிக்க சென்னை தனிப்படை போலீசார் கரூரில் முகாமிட்டு, அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில் பாலாஜி விரைவில் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.



