
கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி, கோடங்கிப்பட்டியில் இன்று காலை நடந்தது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இங்குப் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் 100 சதவீதம் நிறைவேற்றித் தரப்படும். கரூர் மாவட்டத்துக்கு அரசு வேளாண் கல்லூரி, புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் தமிழக முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். 3 ஆண்டு திமுக ஆட்சியில் அதானியுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. இதற்கான அறிக்கையை வெளியிட்டும் ஒரு சிலர் அறிக்கையை முழுமையாகப் படிக்காமல் குற்றம் சொல்லி வருகின்றனர். இந்தியாவிலேயே ஒரு யூனிட் மின்சாரம் குறைந்த விலையில் வழங்குவது தமிழகம் தான். ஒருவர்(அண்ணாமலை) வெளிநாட்டுக்கு சென்று படித்து விட்டு வந்ததாக மாயையை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலிருந்து இந்தாண்டு அரசியல்வாதி, ஐஏஎஸ், ஐபிஎஸ் என 11 பேர் சென்று படித்து விட்டு வந்துள்ளனர். அவரும் பதினொன்றோடு ஒன்று தான்.


