
சேலம் மாவட்டம் வில்லியம்பட்டியில் அனுமதி இன்றி மண் அள்ளப்படுவது குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சிச் செய்தியாளர், மண் திருடர்களால் தாக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலை 11 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்பார்.
11:05 க்கு மணலை அள்ளுங்கள்” என்று திமுகவைச் சேர்ந்த ஒருவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்தக் கனிமவளக் கொள்ளை மட்டும் தான் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அவலத்தைச் செய்தி சேகரிக்கச் சென்றவரை அடிக்கும் தைரியம் மண் திருடர்களுக்கு எங்கிருந்து வந்தது? என்று வினவியுள்ள அவர் ஆட்சியாளர்கள் கொடுத்த தைரியம் தானே அது என்று தெரிவித்துள்ளார்.
தன் பணியைச் செய்த செய்தியாளரைத் தாக்கிய மண் கொள்ளையர்களுக்கும், அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும் திமுக அரசுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளரைத் தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் இயற்கை வளங்களைச் சுரண்டும் திமுகவிடம் இருந்து தமிழகத்தைமீட்போம் என்றும் சூளுரைத்துள்ளார்.
