காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45-வது கூட்டம் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. தமிழ்நாடு அதிகாரிகள் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 89 புள்ளி 741 டி.எம்.சி ஆக உள்ளது எனவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6-ஆயிரத்து 401 கன அடியாக உள்ளது என்றும், அணையிலிருந்து வினாடிக்கு 18-ஆயிரத்து 427 கன அடி நீர், விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது என்றும் தமிழ்நாடு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு, நவம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 13 புள்ளி 78 டி.எம்.சி. நீரினை, உச்சநீதிமன்ற ஆணையின்படி, கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு, ஆணையத்தை வலியுறுத்தினார்.
இதனை பரிசீலித்த ஆணையம், கர்நாடகா அரசு 13 புள்ளி 78 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என தெளிவான உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு அரசு பிலிகுண்டுலு பகுதியில், நீர் வெளியீட்டைக் கண்காணிக்க சிறப்பு பொறியாளர் குழுவை நியமித்துள்ளது.

