
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித் என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்று அடித்துக் கொன்ற காவல்துறையினர் மீது கொலைவழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கோவிலின் காவலாளி அஜித்தை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அடித்துக் கொன்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலேயே அஜித் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் காவலர்கள் ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
படுகொலைக்குப் பணியிடை நீக்கம் தான் தண்டனையா? காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியாதது ஏன்? கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? என்று சீமான் வினவியுள்ளார்.

