
தமிழ்நாடு கிராம சுகாதாரப் பணியாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் தேசிய சுகாதாரத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களின் நியாயமான கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதையும், அவர்களுக்கு 5 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணி நிரந்தரம், ஆண்டுதோறும் 10 விழுக்காடு ஊதிய உயர்வு, அகவிலைப்படி, விழாக்காலச் சிறப்பூதியம், முன்பணம், காப்பீடு ஊக்கத்தொகை, பணிக்கொடை ஆகிய அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பேறுகாலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு என்னும் கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.




