
நெல்லை : நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ., அமைப்பின் மாநிலத் தலைவர் முபாரக் இல்லத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் நாலரை மணி நேரத்திற்கும் மேலாக ரெய்டு நடத்தினர்.
கும்பகோணம் அருகே திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் மதமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்த சம்பவத்தில் அவர் 2019ல் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று தமிழ்நாடு முழுவதும் 24 இடங்களில் சோதனை செய்தனர் .
நெல்லை மேலப்பாளையம் எஸ்.டி.பி.ஐ., அமைப்பின் மாநிலத் தலைவர் முபாரக் வீட்டில் நேற்று அதிகாலை 5:45 மணி முதல் எஸ்.பி., சுந்தரவள்ளி தலைமையில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பேர் சோதனை மேற்கொண்டனர். காலை 10:00 மணி வரை இச்சோதனை நடந்தது. அவரது அலைபேசி, ஒரு கடிதத்தை குழுவினர் கைப்பற்றி எடுத்து சென்றனர். இச்சோதனை நடந்து கொண்டிருந்த நிலையில் அவரது வீடு முன் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கூடினர்.
முபாரக் கூறியதாவது: தஞ்சாவூர் கொலை கொலைக்கும், எஸ்.டி.பி.ஐ.,க்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனை சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். சோதனையில் வீட்டில் இருந்து எதையும் எடுத்து செல்லவில்லை. அலைபேசியை மட்டும் எடுத்து சென்றனர் என்றார்.

