
நவீன அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றாகக் கலந்திருப்பது நமது பண்பாட்டின் மாபெரும் வலிமையாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில், பாரதத்தின் காலத்தைக் கடந்த ஞானம், அமைதிக்கும் முன்னேற்றத்துக்குமான வழிகள் என்னும் தலைப்பில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, உலகச் சமுதாயங்கள் எண்ணற்ற மாற்றங்களைக் கண்டுவருவதாகத் தெரிவித்தார். இந்த மாற்றங்களுடன் மனநலக் கோளாறுகள், சமூகப் பிணக்குகள், சூழலியல் சமனற்ற நிலை, மனித விழுமியங்கள் குறைந்து போதல் ஆகிய சவால்களையும் நாம் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
செல்வத்தையும் பொருட்களையும் குவிப்பதால் மட்டுமே மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வந்து விட முடியாது என்பதைச் சுட்டிக்காட்டினார். அதற்கு உள்ள உறுதி, உணர்வுள்ள நுண்ணறிவு, மதிப்பு வாய்ந்த அணுகுமுறை ஆகியன அடிப்படையாகும் எனக் கூறினார்.
பண்டைய துறவுப் பண்பாடு உண்மை, வன்முறை செய்யாமை, அமைதி ஆகியவற்றை நமக்குத் தந்துள்ளதாகவும், நமது ஆன்மீகப் பாரம்பரியம் உலகின் மனநலம், நீதிநெறி, சூழலியல் ஆகியன சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகளை அளிப்பதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.


