
215 கிலோமீட்டருக்கு மேல் உள்ள பயணத்துக்கு சாதாரண வகுப்புக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு காசும், மெயில் விரைவு ரயில்களில் கிலோ மீட்டருக்கு இரண்டு காசுகளும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு டிசம்பர் 26 முதல் நடைமுறைக்கு வருகிறது.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் புறநகர் ரயில் கட்டணம் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் உயரவில்லை எனத் தெரிவித்துள்ளது.
215 கிலோமீட்டர் தொலைவு வரை சாதாரண ரயிலில் கட்டண உயர்வு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. 215 கிலோமீட்டருக்கு மேல் உள்ள பயணத்துக்கு சாதாரண வகுப்புக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஒரு காசும், மெயில் விரைவு ரயில்களில் கிலோமீட்டருக்கு இரண்டு காசுகளும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர் வசதி வகுப்புகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 2 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வால் ரயில்வேக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்வசதி அல்லாத வகுப்பில் 500 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லும் பயணிக்குக் கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. 2024 – 2025 நிதியாண்டில் ரயில்வே ஊதியம் வழங்க ஒரு இலட்சத்து 15ஆயிரம் கோடி ரூபாயும், ஓய்வூதியம் வழங்க 60 ஆயிரம் கோடி ரூபாயும், இயக்கச் செலவுக்காக 2 இலட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயும் செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் செலவினத்தைச் சமாளிக்கும் வகையில் சரக்குப் போக்குவரத்தை அதிகரிப்பதுடன், பயணியர் கட்டணத்தைச் சிறிதளவு உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

