
கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசுவது மாநிலங்களுக்கு இடையே விரிசலை மட்டுமே உண்டாக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் குறுவை விவசாயம் ஏற்கனவே காய்ந்துவிட்டது, வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
CWRC அமைப்பின் உத்தரவை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்வோம் என்றும், தண்ணீர் திறக்க முடியாது என்றும் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசுவது தேவையற்ற பதற்றத்தையும், மாநிலங்களுக்கு இடையே விரிசலையும் மட்டுமே உண்டாக்கும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இன்று முதல் 15 நாட்களுக்குப் பிலிகுண்டுலுவில் தினமும் 3 ஆயிரத்து 500 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்ற CWRC உத்தரவைக் கர்நாடகா எவ்விதச் சாக்குப்போக்கும் இன்றி உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த 26ஆம் தேதி வரை பிலிகுண்டுலுவில் வழக்கமாக வரவேண்டிய 35.391 டிஎம்சிக்குப் பதிலாக வெறும் 3.543 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழ்நாட்டிற்கு 9.46 டிஎம்சி நீர் பாக்கி உள்ள நிலையில், சட்டப்பூர்வ தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் மதித்து நடப்பதே கூட்டாட்சி தர்மத்திற்கு அழகு என்று குறிப்பிட்டுள்ளார்.



