
சென்னையில் 4 வாரங்களுக்குச் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் எனச் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: மிக்ஜம் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மழை, வெள்ள பாதிப்பு காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் 11-ம் தேதிவரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனை ஈடுசெய்யும் விதமாகச் சென்னையில் 4 வாரங்களுக்குச் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் எனச் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த மாதத்தில் 6 மற்றும் 20ம் தேதிகளிலும் அடுத்த மாதத்தில் 3 மற்றும் 17ம் தேதிகளிலும் பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் பாடங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்க ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் கூறப்பட்டு உள்ளது.


