
ஓசூர் அருகே 50 பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றி, பேருந்தைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு உயிரிழந்த தனியார்ப்பள்ளி ஓட்டுநர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, நாமல்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சீனப்பா(வயது 56). இவர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 20 ஆண்டுகளாகப் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருவதால், அவரது பிள்ளைகளும் அங்கேயே பயின்று வருகின்றனர்.
நேற்று சீனப்பா வழக்கம்போலப் பேருந்தை இயக்கி வந்த வழித் தடமான ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 50 மாணவர்களுடன் பேருந்தை ஓட்டிச் சென்றபோது திடீரென நெஞ்சுவலியால் துடித்துள்ளார். உடனடியாகப் பேருந்தைக் காந்திநகர் என்னுமிடத்தில் சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி மாரடைப்பால் சீனப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாகத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சீனப்பாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையிலும் தன்னை நம்பி பேருந்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எண்ணி அவர் அனுபவித்த வேதனைகளை எண்ணி பெற்றோர்கள் பலரும் கண்ணீர் வடித்தனர்.

