
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
ராமதாஸின் பிறந்தநாளையொட்டி, பாமக தலைவரும் அவரது மகனுமான அன்புமணி ராமதாஸ், குடும்பத்தினருடன் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்து தந்தையை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் இருவரும் இணைந்து 88 மரக்கன்றுகளை நட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், தீவிர அரசியலில் இருந்து விடைபெறுவதாகக் குறிப்பிட்டுப் பேசியதாவது:
”எனது 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், இன்று முதல் அரசியல் பேச மாட்டேன்; அரசியலில் தலையிட மாட்டேன். இனி பாமகவின் அரசியல் மற்றும் கட்சி நடவடிக்கைகளை அன்புமணி பார்த்துக் கொள்வார். என்னை காண வரும் அனைவரையும் வரவேற்பேன். வருபவர்கள் என்னிடம் நலம் விசாரிக்கலாம், நானும் நலம் விசாரிப்பேன். ஆனால், தயவுசெய்து என்னிடம் அரசியல் பேச வேண்டாம், என்னை இனி தொந்தரவு செய்ய வேண்டாம்”.
இவ்வாறு அவர் உருக்கமாகத் தெரிவித்தார். நாற்பதாண்டுகளுக்கும் மேலான தனது நேரடி அரசியல் பயணத்திற்கு அவர் இதன் மூலம் முழு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



