
சாத்தான்குளம் ஜெயராஜையும், அவர் மகன் பென்னிக்சையும் அடித்துக் கொன்ற வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் செல்போன் கடை வைத்திருந்தனர். 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி அவர்கள் இருவரையும் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் விசாரணைக்கு அழைத்துச் சென்றார். அங்கு உதவி ஆய்வாளர்கள், காவலர்களைக் கொண்டு காவல்நிலையத்தில் இருவரையும் கொடூரமாக அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர். இரவு முழுவதும் தந்தையையும் மகனையும் அடித்ததில் இருவரும் குற்றுயிர் ஆகிவிட்டனர்.
அதன்பின் பெயருக்கு நீதிபதி முன் நிறுத்திக் கோவில்பட்டிக் கிளைச் சிறைக்குக் கொண்டுசென்றனர். அங்கு இருவரும் உயிரிந்தனர். இது தொடர்பாக நீதி வேண்டி உள்ளூர் மக்களும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் முருகன், சாமித்துரை, முத்துராஜ், செல்லத்துரை, வெயில்முத்து, தாமஸ் அந்தோணி உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர். சிறையில் பால்துரை என்பவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கைப் புலனாய்வு செய்த சிபிஐ இரண்டாயிரத்து 400 பக்கக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பெண் காவலர்கள் ரேவதி, பியூலா, உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் சாட்சியம் அளித்தனர். மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி முத்துக்குமரன் நேற்றுத் தீர்ப்பளித்தார். இறந்தவர் போகக் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30ஆம் நாள் அறிவிக்கப்படும் என்றும், தந்தை மகன் மீது காவல்துறை பதிந்த வழக்கு பொய்யானது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா – மகன் கிடைத்துள்ளனர்; அடித்துப் பயிற்சி எடுத்துக் கொள்வோம் எனக் காவல்துறையினர் அவர்களுக்குள் பேசிக்கொண்டுள்ளனர் என சிபிஐ தனது குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளதையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.



