
நீர்மூழ்கியில் ஆளனுப்பிக் கடலடியில் ஆறாயிரம் மீட்டர் ஆழத்தில் ஆய்வு மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீர்மூழ்கிக் கலத்தில் ஆளை அனுப்பிக் கடலடி ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ள அதே நேரத்தில் விண்வெளிக்கு ஆளை அனுப்பவும் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டிலேயே மத்ஸ்யாஆறாயிரம் என்கிற நீர்மூழ்கியை இந்தியா தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நீர்மூழ்கியில் ஆளனுப்பி 2026ஆம் ஆண்டில் 500 மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஆய்வு செய்யவும், 2027ஆம் ஆண்டில் ஆறாயிரம் மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஆய்வு செய்யவும் புவி அறிவியல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபடும் திறனுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.



