சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேங்காய் சுடும் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும்!

Advertisements

சேலம்: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பிறப்பான 1-ம் தேதி சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் புதுமண தம்பதியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பெண் வீட்டிற்கு சென்று ஆடிப்பண்டிகையை கொண்டாடுவார்கள். மேலும், புதுமணத் தம்பதியினர் புத்தாடை அணிந்து கோவில்களுக்கு செல்வது வழக்கம்.

இன்று ஆடி 1-ந் தேதி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில், பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், ஆடி முதல் நாளான்று சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேங்காய் சுடும் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும்.

இதையொட்டி சேலம் உழவர் சந்தை, பால் மார்க்கெட், தாதாகப்பட்டி கேட், உட்பட முக்கிய பகுதிகளில் அதிகளவில் அழிஞ்சி குச்சி தேங்காய், அவல், வெல்லம், நாட்டுக் சர்க்கரை, பழம் விற்பனை குவிக்கப்பட்டிருந்தன.

இதன் விற்பனை நேற்று காலை முதலே களைக்கட்டியது. ஒரு குச்சி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். தேங்காயை தரையில் தேய்த்து, பின்னர் அதிலுள்ள 3 கண்களில் ஒன்றில் ஓட்டை போட்டு, அதற்குள் எள், நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலை, அவல், உள்ளிட்டவைகளை நுழைப்பார்கள். பின்னர், அந்த தேங்காயை அழிஞ்சி மரக்குச்சியில் சொருகி நெருப்பில் சுடுவார்கள்.

சுட்ட அந்த தேங்காயை விநாயகருக்கு மற்றும் இதர கோவிலில் வைத்து படையலிட்டு நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி உண்பது வழக்கம். சேலம் மாநகரில் இன்று காலை முதலே பலர் தேங்காயை சுட்டு பண்டிகை உற்சமாக கொண்டாடினார். இதே போல் சேலம் மாவட்டம் முழுவதும் தேங்காய் சுட்டு பண்டிகையை பொதுமக்கள் உற்சமாக கொண்டாடி வருகின்றார்கள்.

இதையொட்டி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *