
விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு விடிய விடிய ஆட்டுக்கறி விருந்து நடைபெற்றது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரம் 1000 ஆண்டுகள் பழமையான சடையாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு அய்யம்பாளையம் பெரியமுத்தாலம்மன் கோவிலிலிருந்து சுவாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாகச் சடையாண்டி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
அதன் பின் சுவாமி பெட்டிக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சடையாண்டி கோவிலுக்குப் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100க்கும் மேற்பட்டஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது. நள்ளிரவில் சடையாண்டி சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு விழாவில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நள்ளிரவில் தொடங்கிய இந்த அன்னதானம் விடிய விடிய நடந்தது.
இந்த அன்னதானத்தில் அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்த வினோத திருவிழாவைக் காண சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

