
இராமநாதபுர சமஸ்தானத்தின் முதலாம் முத்துராமலிங்க சேதுபதி அக்குசால் முருகக் குடும்பனுக்கு வழங்கிய செப்புப் பட்டயத்தைத் தொல்லியல் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.
பழனியை சார்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் மதுரை அயோத்திப்பட்டியைச் சேர்ந்த குடும்பர்கள் தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்புப் பட்டயத்தைப் படித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
இருபத்திரண்டுக்கு பதின்மூன்றரை செண்டிமீட்டர் நீள அகலத்துடன் 175 கிராம் எடையுடன் 52 வரிகளில் எழுதப்பட்ட இப்பட்டயம் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கிறது.
இந்தப் பட்டயத்தில் குறிப்பிடப்படும் இராமநாதபுர சமஸ்தான அமைச்சரான முத்துஇருளப்ப பிள்ளைதான் முல்லைப் பெரியாறு அணை கட்டத் திட்டத்தை வகுத்தவர். இதனை அடிஒற்றி பென்னிகுயிக் அணையைக் கட்டிமுடித்தார். பட்டயம் எழுதப்பட்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி மதுரையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்று கொண்டிருந்ததால் மதுரை அரசுரிமை போரில் ஈடுபட்டிருந்த இரண்டாம் திருமலைநாயக்கர் எனும் பங்காரு திருமலை அப்போது இராமநாதபுர சமஸ்தானத்தில் அடைக்கலமாகி இருந்தார் என்பது செப்பேட்டின் வாயிலாக புலனாகிறது.
முத்துராமலிங்க சேதுபதி நோய்வாய்ப்பட்டிருந்தபோது சூரங்குடியில் இருக்கும் அக்குசால் முருகக் குடும்பன் மருந்து வழங்கியதால் அந்த நோய் தீர்ந்துள்ளது.
இதனால் மேலும் மகிழ்ச்சி அடைந்த அரசரும் அமைச்சரும் அப்போது மதுரை அரசுரிமைப் போட்டியில் இருந்த திருமலைநாயக்கரிடம் தெரியப்படுத்தி முருகக் குடும்பனுக்கு 12 இலட்சம் பொற்காசுகளும் தங்கள் ஆட்சிப்பரப்பில் அவரைச் சாதித் தலைவராகவும் நியமித்தனர்.
இப்போது இப்பட்டயத்தை அக்குசால் முருகக் குடும்பனின் வாரிசுகள் பாதுகாத்து வைத்துள்ளனர் எனத் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.



