
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையோ கர்நாடகா அரசு மதிப்பதில்லை என்று பாமக சட்டமன்றக் குழு தலைவர் செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் பேச்சுவார்த்தை முயற்சி என்பதெல்லாம் தேவையில்லாதது என்று கூறிய செளமியா அன்புமணி, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் வேறு வழியின்றி உபரி நீரை திறந்துவிட்டுள்ளது என்றும் சாடியுள்ளார்.
தமிழக சட்டசபையில் காவிரி விவகாரம் தொடர்பான சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாதது ஏன் என்றும், முதல்வர் விஜய் பெங்களூர் சென்று கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
அந்த வகையில் பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் செளமியா அன்புமணி பேசுகையில், மேகதாது அணை கட்டக் கூடாது. ஆண்டுக்கு 750 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வருகிறது. அதில் கர்நாடகாவுக்கு 285 டிஎம்சி தான் உரிமை.. தமிழ்நாட்டிற்கு 404 டிஎம்சிக்கு மேல் இருக்கிறது. ஆனால் அது குறைந்து 175.25 டிஎம்சியாக உள்ளது. இந்த 175.25 டிஎம்சியில் ஒவ்வொரு மாதமும் அட்டவணைப்படி கொடுக்க வேண்டும்.
ஆனால் கர்நாடகா ஒருபோதும் அப்படி தந்ததே கிடையாது. ஜூன் மாதம் 9.15 டிஎம்சி தண்ணீர் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா 2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கொடுத்தார்கள். ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரில், 1 டிஎம்சிக்கும் குறைவாகவே தண்ணீர் கொடுத்துள்ளார்கள். இதன் மூலமாக உச்சநீதிமன்ற தீர்ப்பையோ, காவிரி நடுவர் மன்ற உத்தரவையோ கர்நாடகா அரசு மதிப்பதில்லை என்று தெரிகிறது.
கர்நாடகா ஒருநாளும் தண்ணீர் கொடுத்ததே இல்லை.. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கபிணி அணை நிரம்பியதால் மட்டுமே கர்நாடகா அரசு தண்ணீரை திறந்துவிட்டது. கர்நாடகாவில் இருக்கும் அணைகளில் தண்ணீரை தேக்கி வைத்துவிட்டார்கள். சட்டப்படி கர்நாடகா தண்ணீர் கொடுக்கவில்லை. வெள்ள நீர், உபர்நீரை தான் கொடுக்கிறார்கள்.
இதனால் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.. ஒற்றுமையாக சென்று டெல்லியில் சந்திப்பு நடத்த வேண்டும். சட்ட முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்ய வேண்டும். மேகதாது அணையை தமிழ்நாட்டில் இருந்து 4 கிமீ தூரத்தில் கட்ட முயற்சிக்கிறார்கள். அதனை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு வராது. அதனை கட்டினால் 12,500 ஏக்கர் காடுகள் அழிந்துவிடும். அத்தனை வனவிலங்கு சரணாலம் தண்ணீரில் போய்விடும்.. அனைத்தும் அழிந்துவிடும்.. சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
நமக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது.. மேகதாது அணை கட்டலாமா, வேண்டாமா என்பது மட்டும்தான்.. இதில் நமக்கு மேகதாது அணை வேண்டாம்.. இதற்டு நடுவில் முயற்சி என்பதெல்லாம் தேவையே இல்லை.. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி டெல்லி செல்ல வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.



