
உக்ரைனுடனான போரில் தாங்கள் தொடர்ந்து வெற்றிபெற்று வருவதாகவும், பயங்கரவாதிகளுடன் எந்தப் பேச்சுக்கும் இடமில்லை என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இருநாட்டுத் தலைவர்களும் அமைதிப் பேச்சுக்கு உடன்படாததால் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைனுடனான போர் குறித்துப் பேசிய ரஷ்ய அதிபர் புடின், உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாகவும் உக்ரைன் படையினர் விரைவில் சிதைந்து போவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் கிழக்கு உக்ரைனின் டொனெட்ச்ஸ்க் பகுதியில் 270 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவைக் கைப்பற்றியுள்ளதோடு ஸ்லோவியன்ஸ்க் மற்றும் கிரமாடஸ்க் நகரங்களை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறி வருவதாகவும்தெரிவித்தார். உக்ரைனின் எரியாற்றல் உள்கட்டமைப்பு மீது பயங்கரத் தாக்குதல்களை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். உக்ரைனுடனான போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுக்களுக்கு ரஷ்யா எப்போதும் தயாராகவே இருக்கும் நிலையில், பயங்கரவாதிகளுடன் எந்தப் பேச்சும் நடத்த முடியாது என்று ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.



