
ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு 9 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் 4 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இரு நாடுகளும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஏதும் கைகொடுக்கவில்லை. உக்ரைன் நிலப்பரப்பை கைப்பற்றுவதில் ரஷ்ய அதிபர் புடின் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் உதவ ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அந்தோனியா கோஸ்டா கூறுகையில், ‘தாங்கள் ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளோம் என்றும் 2026-27ம் ஆண்டுக்காக உக்ரைனுக்கு ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனை வழங்க முடிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இந்தத் தொகையானது, ஐரோப்பிய ஒன்றியத்தால் மூலதனச் சந்தைகளில் கடன் வாங்கப்பட்டு, 27 நாடுகளின் கூட்டமைப்பின் 7ஆண்டு வரவு செலவுத் திட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் ரஷ்ய சொத்துக்களை விற்று பணமாக்குவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் கூறினார்.


