
கருங்கடல் அருகே சோச்சி நகரில் உள்ள ரஷ்யாவின் எண்ணெய்க் கிடங்கை உக்ரைன் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது. இதற்குப் பதிலடியாக கருங்கடலோரத்தில் உக்ரைனுக்குச் சொந்தமான குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இரு நாடுகளும் ஆகஸ்டு எட்டாம் நாளுக்குள் போர்நிறுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அதையும் மீறி நாள்தோறும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கருங்கடல் அருகே ரஷ்யாவின் சோச்சி நகரில் உள்ள எண்ணெய்க் கிடங்கு மீது டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கிராஸ்னடார் மண்டல ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் தென்பகுதியில் கருங்கடலையொட்டிய மிக்கோலாவ் நகரின் மீது ரஷ்யா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


