
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, நாடே முதன்மையானது என்ற கொள்கையின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் நாக்பூரில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் நூறாண்டு நிறைவு விழா மத்திய அரசின் பண்பாட்டுத் துறை சார்பில் தில்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு நினைவு அஞ்சல் தலையையும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூறாண்டுப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் நூறு ரூபாய் நாணயத்தையும் வெளியிட்டார்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விஜயதசமி என்பது தீமையை நன்மை வெற்றிகொண்ட நாளைக் குறிப்பதாகவும், அநீதியை நீதி வென்றதையும், பொய்யை உண்மை வென்றதையும், இருளை ஒளி வென்றதையும் அது குறிப்பதாகவும் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்டுள்ள சிறப்பு நாணயத்தில் ஒருபுறம் இந்திய அரசின் சின்னமும் மறுபுறம் சிம்மவாகனத்தில் அமர்ந்துள்ள பாரதமாதாவின் படமும் பொறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
1963ஆம் ஆண்டு குடியரசு நாள் அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றதையும் நினைவுகூர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் நாடே முதன்மையானது என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.




