
ஆந்திராவில் அதிகாலையில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமணத் தம்பதி உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் மேற்கு வெங்கடாபூரைச் சேர்ந்தவர் பாலகிரண். இவர் பிப்ரவரி 29-ம் தேதி காவ்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 3-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், புதுமணத் தம்பதி மற்றும் மகனின் தாய், தந்தை உள்ளிட்டோர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்யக் காரில் புறப்பட்டனர். பின்னர் திருமலை கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கார் ஆந்திர மாநிலம் நல்லகட்லா அருகே வந்துக்கொண்டிருந்தபோது சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த புதுமணத்தம்பதி பாலகிரண், காவ்யா உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். உடனே விபத்து தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான புதுமணத் தம்பதி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

