
தேசிய தேர்வு முகமையின் பொறுப்பாளர் ஒரு அரசியல் அமைப்பை சேர்ந்தவராக இருக்கக்கூடாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நமது கல்வி நிறுவனங்கள் சுதந்திரமானவையாக இருக்க வேண்டும் என்றும் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ நமது கல்வி நிறுவனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்றும் கூறினார்.
தேசிய தேர்வு முகமையின் பொறுப்பாளர் ஒரு அரசியல் அமைப்பை சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, யாரேனும் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால், உடனடியாகக் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டார். வினாத்தாள் கசிவு ஏற்பட்டால், மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாணவர்களின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேர்மையான தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறையை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.



