
இரட்டைமலை சீனிவாசன் சமூக நீதிக்காக ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்வதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த அவருக்குத் மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்வதாகத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக இரட்டைமலை சீனிவாசன் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த இலண்டனில் இருந்து அவரது பிறந்தநாளில் தன் வணக்கத்தைச் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். நம் மண்ணில் தீண்டத்தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம் என்று முழங்கி, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காகப் போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழைப் போற்றி வணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.




