
நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை:
தான் இத்தனை நாட்களாக அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்ததாகவும், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் கூறி ரவி மோகன் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ரவி மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் கெனிஷா தன் வாழ்க்கைத் துணை என்றும், அவர் தன் வாழ்க்கையில் ஒளி கொண்டு வந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தோழியாக அறிமுகமான கெனிஷா, இப்போது துணையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்போது தான் எடுத்த முடிவால் முன்பு எப்போதும் இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், திருமண வாழ்வைக் காப்பாற்றக் கடும் போராட்டங்களைச் சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளதாகவும், மகன்களைப் பிரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தனை நாட்களாக முதுகில் குத்தப்பட்டதாகவும், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், பிள்ளைகளைப் பார்க்க விடாமல் பவுன்சர்கள் கொண்டு தடுப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
5 ஆண்டுகளாகத் தனது வருமானம் அனைத்தையும் ஆர்த்தியும் அவரது குடும்பத்தினருமே அனுபவித்து வந்ததாகவும், தன்னைப் பொன் முட்டையிடம் வாத்தாக ஆர்த்தியின் குடும்பம் பயன்படுத்தியதாகவும் ரவிமோகன் தெரிவித்துள்ளார்.இத்தனை நாட்களாக அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்ததாகவும், அந்த அமைதிக்கும் எல்லை உண்டு என்றும், ஒரு தந்தையாகத் தனது குழந்தைகளைப் பார்க்கச் சரியாக அனுமதிக்கவில்லை என்றும் ரவிமோகன் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மனிதனாகவும் தந்தையாகவும் தான் விலகிச் செல்ல எடுத்த வலிகளை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் மனைவியைப் பொருளாதார ரீதியாகத் துன்புறுத்துவதாகக் குற்றம்சாட்டுவது நகைச்சுவையாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கண்ணீரும் இரத்தமுமாக இருந்த சூழலில் உயிர்நாடியாகத் தனக்கு இருந்தவர் கெனிஷா என்றும் ரவி மோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


