
சென்னை:தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் அட்டை மூலமாக வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டையைப் பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறுபடும்.ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உணவுப் பொருட்கள் சுத்தமாகக் கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்யக் கூடாது என்பதால் பொருட்களை ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்களை வினியோகம் செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சோதனை அடிப்படையில் சட்டசபை தொகுதிக்கு ஒரு ரேஷன் கடையில் இது போன்று பாக்கெட்டுகளில் பொருட்களை வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாகச் சேலத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.



