
பதினாறு வயதுக்குட்பட்ட சிறார்களுக்குச் சமூக ஊடகங்களைத் தடை செய்துள்ளதன் மூலம் அவர்களுக்குக் குழந்தைப்பருவத்தைக் கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியா பதினாறு வயதுக்குட்பட்ட சிறார்களுக்குச் சமூக ஊடகங்களைத் தடை செய்துள்ளது. இந்தத் தடை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தடையை மீறும் சிறார்களுக்கோ பெற்றோர்களுக்கோ தண்டனை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் சிறார்களுக்குச் சமூக ஊடகக் கணக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனத்துக்கு 5 கோடி ஆஸ்திரேலிய டாலர் அதாவது இந்திய மதிப்பில் 300 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகங்களின் தாக்கத்தை எதிர்கொள்வது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் பெரும் சவாலாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதலால் குழந்தைகள் குழந்தைத் தன்மையை உணர்வதற்கும், பெற்றோர் அமைதியான மனநிலையில் இருப்பதற்குமான முதல் படி இது என்று குறிப்பிட்டுள்ளார்.


