மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்!

Advertisements

புதுச்சேரி:

புதுச்சேரியில் இன்று நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் வெடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் டென்ஷனான ராமதாஸ், “என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது” என்று அன்புமணியை எச்சரித்துள்ளார்.

பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் என்பவரை நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்திருந்தார். இதுகுறித்த அறிவிப்பை இன்று புதுவையில் நடந்த புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அவர் அறிவித்தார். ஆனால் அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது வார்த்தை போராக வெடித்தது. நிர்வாகி தேர்வுகுறித்து எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, “அவன் இப்போதுதான் கட்சிக்கு வந்திருக்கிறான். வந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் தலைவரா? வேறு யாராவது நல்ல அனுபவம் கொண்டவராக நியமிக்க வேண்டும் என்றுதான் கேட்டுக் கொண்டேன். களத்தில் நல்ல அனுபவசாலிதான் தேவைப்படுகிறார்” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அப்படி கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. எனவே நான் சொல்வதை கேட்காதவர்கள் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. மீண்டும் சொல்கிறேன், முருந்தன்தான் மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்படுகிறார். கைத்தட்டுங்கள்” என்று கூறினார். இதற்கு “குடும்பத்தில் இன்னொரு போர்” என்று குறுக்கிட்ட அன்புமணி,

“சென்னை பனையூரில் புதியதாக அலுவலகத்தைத் திறந்திருக்கிறேன். அங்கு வந்து என்னைச் சந்திக்கலாம்” என்று கூற, ராமதாஸ் குறுக்கிட்டு, “மீண்டும் சொல்கிறேன் முகுந்தன்தான் தலைவர்” என்று கூற, அன்புமணி தனத அலுவலகத்தின் தொடர்பு எண்ணை அறிவித்தார்.

அவர் பேசி முடித்து அமர்ந்தபின்னர், “நீ இன்னொரு அலுவலகத்தைத் திறந்து நடத்து என்றுதான் நான் சொல்கிறேன். முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப்போகிறார். அவ்வளவுதானே? எனவே இதை யாராலும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லையெனில்… அவ்வளவுதான். வேறு என்ன சொல்வது? முகுந்தன் தலைவர். இது நான் தொடங்கிய கட்சி. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் அனைவரும் செய்ய வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்ககொள்ளுங்கள். யராக இருந்தாலும்” என்று கூறியுள்ளார். இதனால் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே ஜிகே மணியின் மகனை நிர்வாகியாகக் கொண்டு வருவது குறித்து அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் இடையே பிரச்னை வெடித்தது. பிறகு 2021ல் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், 2024 தேர்தல் நிலைப்பாடு தொடர்பாகவும் இருவருக்கும் இடையே மோதல் வெடித்திருந்தது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த மோதல் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *