
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம்மீதான பிரதமர் மோடியின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில் அவர்களைப் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. புதிய எம்.பிக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தலைத் தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதங்களுக்குப் பிரதமர் மோடி நேற்று மக்களவையில் பதிலளித்தார். இந்து மதம்குறித்து, பிற பிரச்சனைகள்குறித்து ராகுல்காந்தியின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தார். அப்போது ராகுல்காந்தியின் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக அவரின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி 2.15 மணி நேரம் உரையாற்றினார்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்மீதான விவாதங்களுக்குப் பிரதமர் மோடி மாநிலங்களவையில் பதிலளித்து வருகிறார். அப்போது பேசிய அவர் “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். “பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பின் காரணமாக நான் இங்கு வந்துள்ளேன்” என்று அவர் கூறினார்.
மேலும் “ தேசிய ஜனநாயக கூட்டணியின் 3-வது ஆட்சியில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தத் தேர்தலில் மக்கள் வஞ்சக அரசியலையும், பொய் பிரச்சாரத்தையும் தோற்கடித்து விட்டதாகக் கூறினார். அப்போது எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வந்தனர். பொய் சொல்வதை நிறுத்துங்கள் என்றும் தொடர்ந்து கூச்சலிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “பொய்யைப் பரப்புபவர்களுக்கு உண்மையைக் கேட்கும் சக்தி இல்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது, உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாதவர்களுக்கு, இந்த விவாதங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதில்களைக் கேட்கும் தைரியம் இல்லை. மேல்-சபையின் புகழ்பெற்ற பாரம்பரியமான மேலவையை அவமதிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் ““எதிர்க்கட்சிகள் தற்போது மேல்சபையை அவமதித்துள்ளனர். கத்துவதையும் கூச்சலிடுவதையும் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்ற வகையில் நாடு அவர்களைத் தோற்கடித்தது. கோஷங்களும் குழப்பங்களும், ஓடுவதும் மட்டுமே அவர்களின் வேலை” என்று தெரிவித்தார்.


