
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பெற்றது தோல்வியும் கிடையாது, திமுக பெற்றது வெற்றியும் கிடையாது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாராஜி விளக்கம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து வரும் 24-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக அரசைப் பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 24-ம் தேதி திமுக அரசைக் கண்டித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட அதிமுக அறிவித்திருந்தது.
இது தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் இன்று சிவகாசியில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி, திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் தற்போது வரை அனுமதி தரவில்லை. அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். விருதுநகர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் 10 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக தொண்டர்கள் சிறை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
மேலும் திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதை கலாசாரம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதனைத் தடுக்கத் தவறிய திமுக அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் விருதுநகர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக தோல்வி அடைந்தது சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டதாகவும், 40 கட்சிகளைக் கூட்டணி வைத்துக்கொண்டு வெற்றி பெற்று விட்டோம் எனக் கூறுவது பெரிதல்ல. நான்கு கட்சிகளைக் கூட்டணியாக வைத்துக்கொண்டு மிகப்பெரிய ஓட்டு வங்கியைப் பெற்றுள்ளோம். அதிமுக அடைந்தது தோல்வியும் அல்ல, திமுக அடைந்தது வெற்றியும் அல்ல.
வெற்றியைக் கண்டு சந்தோஷப்பட கூடியவர்கள் அல்ல அதிமுகவினர். தோல்வியைக் கண்டு துவண்டு போகக்கூடியவர்களும் அல்ல மீண்டு வருவோம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி. கள்ளக்குறிச்சி உயிரிழப்பு திமுகவுக்கு மிகப்பெரிய இழிவு. அதிமுக அரசு பல்வேறு நல திட்டங்களைக் கொண்டு வந்தது. திமுக கொண்டு வந்தது கள்ள சாராயம். குடிப்பதை ஊக்கப்படுத்துவதற்காகப் பணம் கொடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்கப்படுகிறது அதில் தவறில்லை எனவும் தெரிவித்தார்.


