
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், “ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த ஒரே ஒரு புகைப்படத்தைக் காட்டுங்கள்” எனத் தெரிவித்து, இந்தியா எந்த இழப்பையும் சந்திக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.மெட்ராஸ் ஐஐடியின் 62வது பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, ஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அஜித் தோவல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது, “வெளிநாட்டு பத்திரிகைகள், பாகிஸ்தான் இதைச் செய்தது, அதைச் செய்தது எனப் பல தகவல்களைத் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டது என்றால், ஒரு புகைப்படத்தையாவது காட்ட முடியுமா? ஒரு கண்ணாடி உடைந்த படத்தையாவது காட்ட முடியுமா? ஆனால், மே 10ஆம் தேதிக்கு முன்பும் பின்பும் பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் படங்கள் காட்டப்படுகின்றன.சர்கோதா, ரஹீம் யார் கான், சக்லாலா என எதுவாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு ஊடகங்கள் படங்களின் அடிப்படையில் வெளியிட்டதை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாம் அதனைச் செய்யத் தகுதியானவர்கள்” எனப் பேசினார்.


