
பொதுவெளியில் ஆளுநருக்கு எதிராக அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணியாற்ற முடியாது என காவல் ஆணையருக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று மதியம் ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயிலின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நவம்பர் 9ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி ஏற்படுத்திய நிலையில், ஆளுநரின் துணைச் செயலர் செங்கோட்டையன் சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அதில், புதன்கிழமை மதியம் 2.45 மணியளவில் ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. முதல் குண்டு பிரதான வாயிலில் விழுந்து வெடித்த நிலையில், அந்த குண்டு வெடிப்பு சத்தம் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது. பாதுகாப்பு வீரர்கள் குண்டு வீசியவரை மடக்கிப் பிடித்த நிலையில், மேலும் ஒரு குண்டு வீசப்பட்டது. இதில், பிரதான வாயில் கதவு சேதமடைந்தது. குண்டு வீசிய சம்பவத்தில் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

பாதுகாப்பு வீரர்கள் எச்சரிக்கையுடன் இருந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆளுநருக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. அதில் திமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தாங்கள் கலந்து கொள்ளும் கூடத்திலேயே ஆளுநருக்கு எதிராக சவால்கள் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தும் போலீசார் தரப்பில் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதில் கடந்த 2022ம் ஆண்டு தருமபுரம் ஆதீன நிகழ்வுக்கு சென்ற ஆளுநர் மீது புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தற்போது பொதுவெளியில் ஆளுநருக்கு எதிராக அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. ஆளுநர் மீதான விமர்சனங்களையும் தாண்டி, தற்போது ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஆளுநர் பணியாற்ற முடியாது.
இந்த குற்ற சம்பவம் குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள் உட்பட அனைவரின் மீதும் நடவடுக்கை எடுத்து தண்டனை பெற்று தரவேண்டும். அதேநேரம் ஆளுநர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


