
புதுடெல்லி:பிரதமர் மோடியின் மந்திரி சபையில் அவருடன் சேர்த்து 61 பேர் பா.ஜ.க.விலிருந்து மந்திரிகளாகி இருக்கிறார்கள். மீதமுள்ள 11 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. பிரதமர் மோடி பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து மந்திரிகள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு இன்று காலை முதல் பணிகளைக் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வெளியுறவுத்துறை மந்திரியாக எஸ்.ஜெய்சங்கர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
ஜனநாயக நாட்டில் ஒரு அரசு தொடர்ச்சியாக 3 முறை தேர்ந்தெடுக்கப்படுவது பெரிய விஷயம். பிரதமர் மோடியின் தலைமையில் வெளியுறவுத்துறை சிறப்பாகச் செயல்படும் என முழுமையாக நம்புகிறேன்.
வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பு மீண்டும் ஒருமுறை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மகத்தான மரியாதையாகும். கடந்த காலத்தில் இந்த அமைச்சகம் சிறப்பாகச் செயல்பட்டது. எல்லை பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும். நெருக்கடி காலங்களில் உலக நாடுகளுக்கு உதவி செய்வதால் இந்தியா படிப்படியாக வளர்ந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
