
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.
புதுடெல்லி:வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாகக் கோப்பையை வென்றது.
இந்தத் தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில்,’ வீரராக நான் செய்ய முடியாததை பயிற்சியாளராகப் பரிகாரம் தேடிக் கொண்டதாக நினைக்கவில்லை. ஏனெனில் உலகக்கோப்பையை வெல்லாத வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் பயிற்சியாளராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலி. உலகக்கோப்பையை வெல்வதை சாத்தியமாக்கிய இந்த வீரர்களைப் பெற்றதிலும் எனக்கு அதிர்ஷ்டம் தான். இது ஒரு அற்புதமான உணர்வு.

பயிற்சியாளர் பணியை மிகவும் விரும்பிச் செய்தேன். ரோகித் சர்மா சிறந்த வீரர் மட்டுமல்ல, அருமையான கேப்டனும் ஆவார். என்னிடம் மிகுந்த மரியாதை காட்டிய அவர் அணிமீது காட்டிய அக்கறையும், அர்ப்பணிப்பும், எதிலும் பின்வாங்காத குணமும் என்னைக் கவர்ந்தது. இந்திய அணியை விட்டு விலகியபிறகு நான் அதிகம் தவற விடும் ஒரு நபராக ரோகித் சர்மா இருப்பார். ஆனாலும் நாங்கள் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்’ என்று கூறினார்.


