
ராஜஸ்தானில் பிரதமர் பேசியதை சர்ச்சைக்குரியதாக மாற்றக் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி முயல்கிறது எனப் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் பேசுகையில் “Re distribution of wealth என்ற பெயரில் மதரீதியான சாதி ரீதியான போக்கைக் காங்கிரஸ் கட்சியினர் பேசியும், சொல்லியும் வருகின்றனர். ராஜஸ்தானில் பிரதமர் பேசியதை சர்ச்சைக்குரியதாக மாற்றக் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி முயல்கிறது. பிரதமர் சரியாகப் பேசி வருகிறார்.
சரியான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையின் உண்மையை வெளிப்படுத்தி உள்ளார். காங்கிரஸ் யார் பணத்தை யாரிடமிருந்து எடுத்துக்கொடுக்க போகிறார்கள் எனத் தெரியவில்லை. யார் நிலத்தை எடுத்து யாரிடம் கொடுக்கப்போகிறார்கள், யார் பணத்தை வாங்கி யாரிடம் கொடுக்கப்போகிறார்கள் எனச் சொல்லவில்லை. இந்திய இறையாண்மையில் முஸ்லீம்களுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
காங்கிரசின் பேச்சுக்களால் நாடு பிரிவினை வாதத்தை நோக்கிச் செல்லும் நிலை உள்ளது. ஜின்னா பேசிய வார்த்தைகளைக் காங்கிரசும் ராகுலும் வேறு வேறாகப் பேசி வருகின்றனர், தேர்தலுக்காக இது போன்ற வெறுப்பு பேச்சுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்கு வாங்கி அரசியலுக்காகக் காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகிறார்கள் எனப் பேசினார்.


