
ஆர்.என்.ரவியே வரும் 2026ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டின் ஆளுநராகத் தொடருவார் என்றும் ராஜ்பவன் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே அவர் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து கருத்து மோதல்கள் இருந்து வந்த நிலையில், சமீக காலத்தில் அது குறைந்தது. இந்நிலையில், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் “திராவிட நல் திருநாடு” என்ற வார்த்தையின்றி பாடப்பட்டது பெரும் புயலை தமிழ்நாட்டில் கிளப்பியது. தொடர்ந்து ஆளுநந் திராவிடம் குறித்து சர்ச்சையாகப் பேசி வரும் நிலையில், திட்டமிட்டு இந்த வார்த்தை நீக்கப்பட்டதாகக் கூறி அவரைத் தமிழக ஆளுநர் பதவிலிருந்து நீக்க வேண்டும் என்று திக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் தமிழ்நாடு அரசின் முதல்வரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படியான சூழலில் ஐந்தாண்டுகள் பதவி காலத்தை முடித்த ஆளுநர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குப் பதில் புதியவர்களுக்கு ஆளுநர்களாக வாய்ப்பு கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு ஆளுநரின் பெயர் இந்தப் பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆர்.என்.ரவிக்கு பதில் புதிய ஆளுநராக வி.கே.சிங் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இவர் இந்திய ராணுவத்தின் முன்னள் தளபதியாகப் பதிவு வகித்தவர். அதே நேரத்தில் மத்திய பாஜக அரசில் பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் வி.கே.சிங். 2021 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளராக இவரைப் பாஜக தலைமை அறிவித்தது. இவரது கண்காணிப்பிலேயே கடந்த நாடாளுமன்ர தேர்தலில் பாஜக வேலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இப்படியான செய்திகள் வெறும் வதந்தி என்றும் ஆர்.என்.ரவியே வரும் 2026ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டின் ஆளுநராகத் தொடருவார் என்றும் ராஜ்பவன் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆர்.என்.ரவியை மாற்றுவது தொடர்ந்த எந்தச் சமிஞ்கையும் ஆளுநர் மாளிகையில் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிகிறது.




