
புதுச்சேரியில் பாலியல் பலாத்கார முயற்சியின்போது 9 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி படுகொலைக்கு நியாயம் கேட்டு வீதியில் இறங்கி புதுவை மக்கள் போராடி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள், மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் புதுவையின் பல பகுதிகளில் ஒன்று திரண்டு நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் குடும்பத்தில் ஒருவனாகப் பங்கெடுத்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலம், சோலை நகர் பகுதியில் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி, கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை, தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது, இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதுவே இது போன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கும் எனவும் வலியுறுத்துவதுடன், பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் உங்களது குடும்பத்தில் ஒருவனாகப் பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



