M.K. Stalin: ஆய்வுக்கூடங்கள் திறப்பு!

Advertisements

சென்னை: தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.23.65 கோடி செலவில் திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளங்கள் மற்றும் ஆய்வுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சங்கக் கட்டடம் மற்றும் திருமண மண்டபத்தைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உறுப்பினர்கள் விளைவிக்கும் வேளாண் விளைப்பொருட்களை நியாயமான விலைக்குச் சந்தைப்படுத்திட ஏற்பாடு செய்தல், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை விநியோகித்தல், விளைப்பொருட்களின் மீது தானிய ஈட்டு கடன் வழங்குதல், வேளாண் விளைப்பொருட்களை பதப்படுத்தி மதிப்பு கூட்டும் பணியினை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

அதேபோல், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில், விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விரைவாகவும், எளிதாகவும் சரியான எடையில், நியாயமான விலையில் விற்பனை செய்ய ஏதுவாக மின்னணு வர்த்தகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திடும் வகையிலும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையிலும், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.26 கோடி செலவில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம்.

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.6.93 கோடி செலவில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம் மற்றும் ஆய்வுக்கூடம், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.26 கோடி செலவில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.5.63 கோடி மதிப்பில் 2,000 மற்றும் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரு கிடங்குகள் மற்றும் ஏலகளம்.

அதேபோல், நகர்வாழ் அடித்தட்டு மக்களின் பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்ய ஏதுவாக, சிந்தாதிரிப்பேட்டை நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 2,306 சதுர அடி பரப்பளவில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மறைமலைநகரில், தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 16,000 சதுர அடி பரப்பளவில் ரூ.3.52 கோடி செலவில் சங்கத்தின் சொந்த நிதியில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு திருமண மண்டபம், என மொத்தம் ரூ.23.35 கோடி செலவில் கூட்டுறவுத் துறை கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கோபால், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *