
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது, 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைந்து, அதே பகுதியில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.அதன் பிறகு, அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை மறுநாள் காலை தீவிர புயலாக தீவிரமடையக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது நாளை மறுநாள் மாலை ஆந்திராவின் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்றும், அப்போது, 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் மொந்தா புயல் எச்சரிக்கை காரணமாக ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 27) முதல் அக். 29 வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



