பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளை ரத்து செய்யலாம் – சுப்ரீம் கோர்ட்!

Advertisements

வயதான காலத்தில் பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாமென உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை கவனித்துக் கொள்ளாத மகனிடமிருந்து தான் வழங்கிய சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மேலும் தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், வயதான பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்கவில்லை என்பதற்காகத் தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது என்றும் அவ்வாறு கவனிக்க வேண்டும் என்று மனுதாரர் எந்த நிபந்தனையையும் பத்திரம் எழுதும்போது விதிக்கவில்லை என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் தற்போது விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், ம.பி. உயர் நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டுமே ஆராய்ந்து தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால், மூத்த குடிமக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சொத்துகளை எழுதிக் கொடுத்தபிறகு பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்கிறது.

இது போன்ற சூழ்நிலையில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்களுக்குப் பெற்றோர் எழுதிக் கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். அந்தத் தான பத்திரத்தைச் செல்லாது என்று அறிவிக்க 2007 சட்டத்தின் பிரிவு 23 [பெற்றோர் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள்] சட்டத்தில் இடம் இருக்கிறது.

சொத்துகளை எழுதி வைத்தவருக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளைச் சொத்துகளைப் பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறினால், சொத்துகளை எழுதிக் கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *