
கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு நடிகை பிரியாமணி யானை ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.
தமிழில் பருத்திவீரன் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியாமணி. இதையடுத்து தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் நடித்த பிரியாமணி தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். கடந்தாண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருந்தார் பிரியாமணி. ஜவான் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவருக்குப் பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், விலங்குகளைப் பாதுகாக்கும் அமைப்பான பீட்டா உடன் இணைந்து நடிகை பிரியாமணி ஒரு யானையைப் பரிசாக வழங்கி இருக்கிறார். கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளைக் கோவில்களில் இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தைப் பீட்டா அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகை பிரியாமணியும் பீட்டாவும் இணைந்து ஒரு இயந்திர யானையைப் பரிசாக வழங்கி இருக்கிறார்கள்.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்குத் தான் அவர் அந்த இயந்திர யானையைப் பரிசாக வழங்கி இருக்கிறார். கேரள கோவிலும் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது இயந்திர யானை இதுவாகும். இந்த யானைக்கு மகாதேவன் எனவும் பெயரிட்டு உள்ளனர். இதுகுறித்து பேசிய நடிகை பிரியாமணி, “பீட்டா அமைப்புடன் சேர்ந்து இயந்திர யானையைப் பரிசாக அளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறினார்.
சமீப காலமாகத் திருமண விழாக்களில் மட்டும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த இயந்திர யானைகள் தற்போது கோவில்களிலும் பயன்பாட்டு வந்திருக்கிறது. இந்த இயந்திர யானைகள் வருகையால் கோவில் யானைகள் துன்புறுத்தப்படுவது தடுக்கப்படும் என்று பீட்டா அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அமைப்பின் இந்த முன்னெடுப்புக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


