
பாட்னா:நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதிவரை 7 கட்டங்களாகப் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலுக்குப் பிறகு கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன அதில் பா.ஜ.க. மீண்டும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் எனக் கூறப்பட்டது.
பிரபல அரசியல் ஆலோசகரும், வியூகங்கள் வகுத்துக் கொடுப்பவருமான பிரசாந்த் கிஷோர் பா.ஜ.கத்தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லையெனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களில் பெற்றி வெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெறமுடியாமல் போனது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது.
இதுதொடர்பாகக் கிஷோர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பா.ஜ.க.வுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கைகுறித்து பேசியிருக்கக் கூடாது. இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் எனச் சீட் எண்ணிக்கைகுறித்து பேசமாட்டேன் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் களமிறங்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.




