
கர்நாடக மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே இந்தப் பணிகள் முடிந்துள்ள நிலையில், கர்நாடகம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் பெங்களூரில் வாக்காளர் பட்டியலில் இருந்து தன் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். தான் பிறந்து வளர்ந்தது மட்டுமல்லாமல், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுள்ள நிலையில் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் ஆள் இல்லாதது, இடம் மாறியது, இறந்தது, இரட்டைப் பதிவு உள்ளிட்ட காரணங்களால் ஒரு கோடியே 9 இலட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இது வாக்குரிமையை மறுக்கும் செயல் என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் பல மாநிலங்களில் நான்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதும், இதையடுத்துத் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து பிரகாஷ்ராஜ் பெயர் நீக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.


