இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி நடக்கும் ராய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 5 ஆண்டுகாலமாக கரண்ட் பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் முறையே 2-1 என்று ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்தப் போட்டியானது ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
போட்டி தொடங்க இன்னும் குறைவான நேரங்கள் உள்ள நிலையில், மைதானத்தில் சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. ஏனென்றால், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. ரூ.3.16 கோடி நிலுவையில் உள்ள நிலையில் உள்ளதால், 5 ஆண்டுகளுக்கு முன்பு மைதானத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து சட்டீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் வைக்கவே மைதானத்தில் தற்காலிக இணைப்பு நிறுவப்பட்டது. ஆனால், இது பார்வையாளர்களின் கேலரி மற்றும் பாக்ஸ்களை உள்ளடக்கியது. ஜெனரேட்டர் பயன்படுத்தி ப்ளட்லைட் மின் விளக்குகளை ஜெனரேட்டர் பயன்படுத்தி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.


