
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். இதற்கிடையே போப் இறப்பிற்குப் பிறகு அவருடைய படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது. மேலும், போப் பிரான்சிஸுக்கு வரும் சனிக்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2013ம் ஆண்டு முதல் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராகப் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தில் அவர் வீல் சாரில் வந்து மக்களை சந்தித்தார்.
அவரது உடல்நிலை சீராகி வந்ததாகவே பலரும் கருதினர். யாரும் எதிர்பாராத விதமாக மறுநாள், அதாவது நேற்று ஏப்ரல் 21ம் தேதி அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். வாடிகன் நகரில் இருந்த போப் பிரான்சிஸ் நேற்று காலை காலமானதாக அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே இறப்பிற்குப் பிறகு போப் பிரான்சிஸின் படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடலை வாடிகன் வெளியுறவுச் செயலாளர் ஜெபிப்பதைப் போன்ற வீடியோவை வாடிகன் வெளியிட்டுள்ளது.
சிவப்பு அங்கிகளுடன், பிஷப் ஆடை போப் பிரான்சிஸுக்கு அணிவிக்கப்பட்டு, அவர் வசித்த இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது அதில் தெரிகிறது. மேலும், போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.பொதுவாக போப் இறந்தால் 4 முதல் 6 நாட்களில் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும். இதற்கிடையே போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.



