
உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
2006 – 11ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சட்டவிரோமாக மண் அள்ள அனுமதி கொடுத்து அரசிற்கு 28 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி மனு அளித்த நிலையில், வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனைகளின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாகக் கடந்த 2008ம் ஆண்டு கௌதம சிகாமணி ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இந்தோனேசியா நாட்டில் உள்ள பல நிறுவனங்களில் முதலீடுகளை வாங்கி உள்ளதாகவும், இதில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் நடந்தது தெரிய வந்தது.
ஆவணங்கள் தொடர்பாக அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கௌதம சிகாமணி ஆகியோரின் 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


