
பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சிகப்பு அட்டை தாரர்களுக்கு 500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த புதுவை அரசு முடிவு செய்துள்ளது.
தமிழர்களின் முதன்மை பண்டிகையான பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாகப் பச்சரிசி, முந்திரி, வெல்லம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பொருட்கள் தரம் இல்லாமல் இருப்பதாகப் புகார் வந்ததையடுத்து கடந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், முழுக்கரும்பு வழங்கப்பட்டது.
அதே போல இந்தாண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு மட்டும் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே பொங்கல் பரிசுத் தொகை தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் கடந்த 2022ஆம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதற்குப் பதிலாகக் கடந்த ஆண்டுப் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்தாண்டும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தாண்டு 3 லட்சத்து 53 ஆயிரத்து 249 பேருக்குத் தலா 500 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 சிகப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச துணிக்குப் பதிலாக 1000ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

